Friday, 19 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

ரூ.1 கோடி நஷ்டஈடு நோட்டீஸை திரும்பப் பெற பாஜக தேசிய தலைமையிடம் ஏஎன்எஸ் பிரசாத் கோரிக்கை

சென்னை: ‘பாஜகவின் நிர்வாக முறைகேடுகளை வெளிக்கொண்டுவர விரும்புகிறேன், தனக்கு எதிரான ரூ.1 கோடி நஷ்டஈடு அவதூறு நோட்டீஸைத் திரும்பப் பெறவேண்டும்’ என்று பாஜக தேசிய தலைமையிடம் ஏ.என்.எஸ்.பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்: ‘கட்சியின் நலன் மற்றும் ஒருமைப்பாட்டைக் கருத்தில்கொண்டு, வெளிப்படையாகச் சில ஆலோசனைகளையும் கருத்துகளையும் முன்வைத்ததே நான் செய்த ஒரே தவறு. எனது நிலைப்பாட்டில் பிழை இருப்பதாகக் கருதியிருந்தால், தலைமையே என்னிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்.

தமிழகம் முழுவதும் எனக்குக் கிடைத்து வரும் மக்கள் ஆதரவையும், நேர்மறையான ஊடக வெளிச்சத்தையும் கண்டு தனிப்பட்ட முறையில் பொறாமை கொண்ட திருப்பதி நாராயணன் போன்றவர்கள், தொடர்ந்து என் மீது தவறான தகவல்களைப் பரப்பி என்னை ஓரங்கட்டும் சதியில் ஈடுபட்டுள்ளனர். மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் எனக்கு எதிராகத் திட்டமிட்டு இத்தகைய நடவடிக்கைகளை எடுத்திருப்பது எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.

நான் எந்தவொரு அதிகாரப்பூர்வமான பதவியையும் எதிர்பார்க்கவில்லை. அதேசமயம், நயினார் நாகேந்திரன் மற்றும் எல்.முருகன் ஆகியோர் அதிகாரத்தில் இருக்கும்வரை, நான் எந்தப் பொறுப்பையும் ஏற்கப்போவதில்லை. தமிழக பாஜகவில் ஒரு உண்மையான அடிப்படைத் தொண்டனாகத் தொடர்ந்து பணியாற்றுவதற்கு ஏற்ற, இணக்கமான சூழலை மட்டுமே நான் கோருகிறேன்.

தமிழக பாஜக சார்பில் எனக்கு எதிராக ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸைத் திரும்பப் பெறுவதற்குத் தேசியத் தலைமை உடனடியாகத் தலையிட வேண்டும். என்னை மீண்டும் பாஜகவில் இணைத்துக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன், தமிழக பாஜகவின் நலனைக் காக்கும் பொருட்டு, கடந்த தேர்தலுக்கு முன்பாக மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகங்களில் நடைபெற்ற சில முறைகேடுகள் மற்றும் தேர்தல் நிதி தொடர்பான விவகாரங்களை, எவ்வித உள்நோக்கமும் இன்றி தேசியத் தலைமையின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தின் நகலை, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் ஏ.என்.எஸ்.பிரசாத் அனுப்பி உள்ளார்.