Tuesday, 01 September 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

பாலஸ்தீனத்தில் 112 பேரின் உடல்களுக்கு கூட்டு இறுதிச் சடங்கு: 2023-ல் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தவர்கள்

காசா: கடந்த 2023, நவம்பர் 22-ம் தேதி அன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசா பகுதியில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அந்த தாக்குதலில் உயிரிழந்த 112 பேரின் உடல்களுக்கு கூட்டு இறுதிச் சடங்கு நடைபெற்றது.

கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதல் மிக தீவிரமானது. இதையடுத்து இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பாலஸ்தீனத்தை சேர்ந்தவர்களில் சுமார் 72,000 பேர் உயிரிழந்ததாக தகவல்.

ஹமாஸ் தாக்குதலுக்கு பிறகு பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியது. அந்த வகையில் கடந்த 2023, நவம்பர் 22-ம் தேதி அன்று இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் குடியிருப்பு பகுதிகள் கடும் சேதமடைந்தன. அதில் வசித்து வந்த மக்கள் பலர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

அந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 300 என உள்ளூர் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. அதில் 40 பேரின் உடல்கள் அப்போது மீட்கப்பட்டது. எஞ்சிய உடல்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் புதைந்தது.

இந்நிலையில், கடந்த வாரம் அந்த பகுதியில் மீண்டும் உடல்களை மீட்கும் பணிகள் நடைபெற்றது. அதில் சுமார் 112 பேரின் உடல்கள் அங்கிருந்து மீட்கப்பட்டது. இதில் 40 பேர் குழந்தைகள். இன்னும் 150 பேரின் உடல் அங்கிருந்து மீட்கப்பட வேண்டுமென ஹமாஸின் உள்விவகார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில், மீட்கப்பட்ட 112 பேரின் உடலும் பாலஸ்தீன தேசிய கொடியால் போர்த்தப்பட்டு, பிரார்த்தனைக்குப் பிறகு காசாவில் கூட்டாக அடக்கம் செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த இறுதி சடங்கில் ஏரளாமான மக்கள் பங்கேற்றனர். ‘தங்களுக்கு வீடுதான் பாதுகாப்பு என தஞ்சம் கொண்ட அப்பாவி மக்கள் தான் இதில் உயிரிழந்தனர்’ என தாக்குதலில் உறவினரை பறிகொடுத்த ஒருவர் உருக்கமாக தெரிவித்தார்.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 7,400 பேரின் உடல் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக காசா பிராந்தியத்தின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது உறவினர்கள் அளித்த தகவல் மூலம் உறுதி செய்யப்பட்டதாக தகவல். மீட்கப்படாமல் உள்ள உடல்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்தார். இஸ்ரேல் ராணுவம், காசா பகுதியில் தங்களது நடவடிக்கை நிறுத்த வேண்டும் என்றும், ஹமாஸ் மற்றும் அவர்களின் கூட்டு அமைப்பினர் தங்களது செயல்பாட்டை நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அமைதி ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களும் வெளியாகின. இந்நிலையில், தங்களுக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலை இஸ்ரேல் வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.