Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஜூன் 16 கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை மறுதினம் (ஜூன் 16) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசத்துக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென் தமிழகம் வரை தென்மேற்கு வங்கக்கடல் வழியாக சுமார் 3.1 கி.மீ. முதல் 4.5 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஜூன் 15) திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுதினம், நாமக்கல், சேலம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர். திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், 17-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

ஜூன் 18 முதல் 20-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 18-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, தருமபுரி மாவட்டம் இண்டூரில் 6 செமீ, காஞ்சிபுரத்தில் 5 செமீ, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், கடலூர் மாவட்டம் பெலாந்துறை, ராணிப்பேட்டை மாவட்டம் கலவை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் தலா 4 செமீ, கடலூர் மாவட்டம் வேப்பூர், அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம், செந்துறை, சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர், கடலூர் மாவட்டம் புவனகிரி, விருதாச்சலம், குப்பநத்தம், காட்டுமன்னார்கோவில், விழுப்புரம் மாவட்டம் ஆனந்தபுரம், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.