Friday, 19 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

அமெரிக்காவை மிரட்டிவிட்ட ஈரான்

டெஹ்ரான்: அமெரிக்கா - ஈரான் இடையேயான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் தான் உலக வல்லரசுகளின் அழுத்தத்துக்கு ஈரான் எப்போதும் தலை வணங்காது என்று அந்த நாட்டின் அதிபர் மசூத் பெசேஸ்கியான், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையேயான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முயற்சிக்கிறது. அதனை கைவிட்டு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று அதிபர் டிரம்ப் கூறிவருகிறார்.

இதுதொடர்பாக இருநாடுகள் இடையே 2 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அமெரிக்கா ஈரானை சுற்றி போர்க்கப்பல், போர்விமானங்களை குவித்து வருகிறது. மேலும் எப்போது வேண்டுமானாலும் அதிபர் டிரம்ப் அனுமதி கொடுத்தவுடன் ஈரானை குறிவைத்து தாக்குதல் நடத்த அமெரிக்க படைகள் தயார் நிலையில் உள்ளன. நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு நடுவே ஈரானும் தற்காத்து கொள்ள தயாராகி வருகிறது. அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு நாங்களும் தாக்குதல் நடததுவோம் என்று ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. இதற்கிடையே தான் உலக வல்லரசுகளின் அழுத்தத்துக்கு ஈரான் அடிபணியாது என்று அந்த நாட்டின் அதிபர் மசூத் பெசேஸ்கியான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஈரான் அரசு தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களிடம் நேரலையில் பேசினார். அப்போது அவர், ‛‛உலக வல்லரசுகள் நம்மை அடிபணிய செய்ய வரிசையில் நிற்கின்றன. ஆனால் எவ்வளவு பிரச்சனைகள் உருவாக்கினாலும் அதற்கு தலை வணங்க மாட்டோம்'' என்றார்.

அதேபோல் பாரா ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களை கவரவிக்கும் விழாவில் பேசிய அதிபர் மசூத் பெசேஸ்கியான், ‛‛அனைத்து உலக சக்திகளும் நமக்கு எதிராக அநீதி இழைக்கும் வகையில் நின்றாலும் நாம் ஒருபோதும் நாம் சரணடைய மாட்டோம். பிரச்சனைகள் எவ்வளவு இருந்தாலும், காயங்கள் ஏற்பட்டாலும் கூட எந்த நிர்பந்தங்களுக்கும் சரணடைய மாட்டோம்'' என்றார்.