Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!

சென்னை: நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் சென்னையில் இன்று (மார்ச் 13) காலை எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பும், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் பி.காளியம்மாள். தன்னுடைய அதிரடி பேச்சால் குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்தார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் வட சென்னை தொகுதி நாம் தமிழர் வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது 60,000 வாக்குகள் பெற்றார். அந்தத் தேர்தலின்போது அவரின் பேச்சுகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

அவர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகினார். அப்போது, “தமிழ்த் தேசியத்தை விதைக்கும் வகையில் எம் பயணம் தொடரும்” என அறிவித்திருந்தவர், எந்தக் கட்சியிலும் இணையாமல் இருந்தார். அவருடன் திமுக, அதிமுக, தவெக என அனைத்துக் கட்சிகளுமே பேச்சுவார்த்தையில் இருந்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை அவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்தப் பேட்டியில், “ஒரு தமிழனின் தலைமையில் இயங்கவே அதிமுகவில் இணைந்தேன். ஒரு சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்துவந்த எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று நான் இன்று அதிமுகவில் இணைந்துள்ளேன்” என்றார்.

நாகையைச் சேர்ந்த காளியம்மாள் தனது ஆரம்ப காலத்தில் கடலோரப் பகுதி மக்களின் பிரச்​சினை​களுக்கு தீர்வு காணும் வகையில், 15 கடலோர மாவட்​டங்​களை ஒருங்​கிணைத்​து, ‘தமிழக மீனவ பெண் தொழி​லா​ளர்​கள் சங்​கம்’ என்ற அமைப்பை ஏற்​படுத்தி, அதன் மாநில பொதுச் ​செய​லா​ள​ராக இருந்​தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட ஓராண்டு காலம் எந்தக் கட்சிக்கும் பிடி கொடுக்காமல் இருந்த காளியம்மாள் அதிமுகவில் இணைந்துள்ளது கவனிக்கத்தக்கது. காளியம்மாள் மேடைப் பேச்சுத் திறன் கொண்டவர். நாதகவில் இருந்தபோதே அவரது பேச்சால் அக்கட்சியின் தொண்டர்களைக் கட்டிப் போட்டதிலும், பெண்களை ஈர்த்ததிலும் அவருக்கு பங்கு இருந்தது. அதனாலேயே கட்சிக்குள் சீமான் அவருக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க, பின்னாளில் அந்த முக்கியத்துவமே உரசலுக்கும் வித்திட்டது. பின்னர் நாதகவில் இருந்தே விலகினார்.

இப்போது அவர் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார். இது, அவரது ஆதரவாளர்களையும், நாதக அதிருப்தியாளர்களையும் ஈர்த்திட துணைபுரியும் என்பது அதிமுகவின் நம்பிக்கை. அத்துடன், அதிமுகவில் பெண் முகத்துக்கு பற்றாக்குறை என்பதைவிட துடிப்பான இளம் பெண்ணாக காளியம்மாள் இருப்பது மகளிரணிக்கு பெரும் பூஸ்டாக இருக்கும் என்று கட்சி கணித்துள்ளது.மகளிர் வாக்குகளைக் கவர, காளியம்மாளின் பேச்சு மிக முக்கிய அஸ்திரம் என்பதாலே அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வரை கொடுக்க அதிமுக தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.