Friday, 19 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

வருவாய்த் துறை, காவல் துறை இணைந்து திமுகவை வெற்றி பெற வைக்க முயற்சி- நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி: “தமிழகத்தில் வருவாய்த் துறை, காவல் துறையினர் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு திமுகவை வெற்றி பெற செய்ய முயற்சி செய்கின்றனர். ஆனால் அது நடக்காது” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திருநெல்வேலி தொகுதிக்கு உட்பட்ட பழைய பேட்டை பகுதியில் அதிமுக வேட்பாளர் தச்சை கணேசராஜாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள வந்த நயினார் நாகேந்திரன் கூறியது: “தமிழகத்தில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளன. சாலைகள், மேம்பாலங்கள் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் மத்திய அரசின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், மாநில அரசு மக்கள் பயன்பாட்டுக்கான முன்னேற்றத் திட்டங்கள் எதையும் கொண்டுவரவில்லை. இது குறித்து பொதுமக்கள் முன்னிலையில் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. மாநிலத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது பொய். தமிழக முதல்வர் சொல்லும் மாநில வளர்ச்சி எதில் என்றால் கஞ்சா விற்பனையில் மட்டுமே.

காங்கிரஸ் கட்சி எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை. திமுக கூட்டணியில் மட்டும்தான் அக்கட்சி இருக்கிறது. ஆலங்குளம் பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் காவல் நிலைய மரணங்களும் நடைபெற்று வருகின்றன. சட்டம் மற்றும் ஒழுங்கை கட்டுப்படுத்த காவல் துறையால் முடியவில்லை.

முதல்வரைப் பற்றி தவறாக பேசினால் உடனடியாக கைது செய்கிறார்கள். ஆனால், பிரதமரை கொலை செய்ய வேண்டும் என கூறியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார். காவல் துறை உயர் அதிகாரிகளும் அதேபோல் செயல்படுகின்றனர்.

வருவாய் துறையும் காவல் துறையும் இணைந்து திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர முயற்சி செய்கின்றனர். ஆனால் அது நிச்சயமாக நடைபெறாது. அதிமுக திட்டங்களை பார்த்து காப்பி அடித்தே திமுக செயல்பட்டு வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது ஏராளமானோர் கூடியிருந்தது தொடர்பான கேள்விக்கு, “அதை நான் பார்க்கவில்லை” என்று பதில் அளித்தார்.