புதுக்கோட்டையில் இன்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, அடிமைசாமி என்று கூறி கடுமையாக விமர்சித்து பேசினார்.
புதுக்கோட்டையில் திமுக பரப்புரை பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பேசினார். அவரது உரையில், இபிஎஸ் குறித்து அவர் பேசியதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
“நான் இன்னும் ஏராளமான திட்டங்களை மக்களுக்கு வழங்குவேன்“
இந்த கூட்டத்தில், புதுக்கோட்டைக்குட்பட்ட தொகுதிகளின் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக அரசு செயல்படுத்திய திட்டங்களை விரிவாத எடுத்துக் கூறினார்.
அப்போது, கொரோனாவில் நான் போயிருக்க(இறந்திருக்க) வேண்டும் என்று வன்மத்தோடு எடப்பாடி பழனிசாமி பேசியதாக குறிப்பிட்ட அவர், ஆனால், நான் இருந்து ஏராளமான இன்னும் ஏராளமான திட்டங்களை மக்களுக்கு செய்யத்தான் போகிறேன், அதை நீங்கள்(மக்கள்) பார்க்கத் தான் போகிறீர்கள் என்று தெரிவித்தார்.
NDA என்ற பேரிடரை தமிழ்நாட்டிற்குள் பின்வாசல் வழியாக கொண்டுவருவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதன்மை அடிமைதான் பழனிசாமி என கூறிய ஸ்டாலின், அவர் பழனிசாமி இல்லை, ஆமாம்சாமி, அடிமைசாமி என கடுமையாக விமர்சித்தார்.
அதிமுக, தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்யும் என்டிஏ கூட்டணியில் அடிமைசாசனம் எழுதிக் கொடுத்து சேர்ந்திருப்பதாக விளாசிய அவர், அந்த கூட்டணி டெல்லியில் வைத்து முடிவு செய்யப்பட்ட கூட்டணி என்று கூறினார். மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று நேற்று பேசியதற்கு, அடிமைசாமியான பழனிசாமி ஏதாவது பதில் கூறினாரா என கேள்வி எழுப்பிய அவர், இங்கு வந்து பேசும் மத்திய அமைச்சர்கள் பலரும், இந்தி திணிப்பிற்கு ஆதரவாக மும்மொழிக் கொள்கையை நிச்சயம் செயல்படுத்துவோம் என்று பேசி வருவதற்கும், அடிமைசாமி குரல் கொடுத்திருக்கிறாரா என்றும் கேட்டார்.