Friday, 19 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

“தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” - டெல்லி முதல்வர் ரேகா குப்தா குற்றச்சாட்டு

கோவை: முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என டெல்லி முதல்வர் ரேகா குப்தா குற்றம்சாட்டினார்.

டெல்லி முதல்வர் ரேகா குப்தா கோவை வடக்குத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர், கோவையில் தங்கிய அவர் இன்று (ஏப்.16) தனியார் சார்பில் நடந்த கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து இன்று மதியம் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

“முதல்வர் ஸ்டாலின் ஆட்சி காலத்தில் பெண்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை. இந்தத் தருணத்தில் அனைத்து பெண்களும், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் பெண்களை அவமதித்து வருகிறார்.

திருச்சியில் திமுகவின் இலவச கூப்பன் விவகாரம் தொடர்பாக ஒரு பெண், திமுக குண்டர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அதோடு மட்டுமின்றி, அவர்கள் அந்த பெண்ணை அவமதித்து இழிவுபடுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள இந்த அரசாங்கம் ஒரு பாதுகாப்பற்ற அரசாங்கமாகும். முதல்வர் உள்ளிட்டோர் இங்கு தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக போராட்டம் மேற்கொள்கிறார்கள். ஆனால், அது பெண்களுக்கு சாதகமான ஒன்றுதான்.

பெண்கள் முன்னேற வேண்டாம் என்று திமுக கருதுகிறது. திமுகவின் உதயசூரியன் சின்னம் என்பது உதயசூரியன் அல்ல, அஸ்தமனமாக கூடிய சூரியன். முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு எதிரானவர். அவர் ஒரு குற்றவாளி” என்றார்.