Friday, 19 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

“வடக்கோ, தெற்கோ எந்த மாநிலத்துக்கும் தொகுதி மறுவரையறையில் அநீதி, பாகுபாடு இருக்காது” - பிரதமர் மோடி

புதுடெல்லி: “பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக மேற்கொள்ளப்படும் தொகுதி மறுவரையறையில் வடக்கோ, தெற்கோ, சிறிய மாநிலமோ, பெரிய மாநிலமோ யாருக்கும் அநீதி இழைக்கப்படாது; யாருக்கும் பாகுபாடு காட்டப்படாது” என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.

மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “சிலர் வெறுப்பு அரசியல் ஆதாயத்துக்காகவே குழப்பங்களை விளைவிக்கின்றனர். வடக்கு, தெற்கு, கிழக்கு அல்லது மேற்கு என எந்த திசையில் உள்ள மாநிலமாக இருந்தாலும் சரி; சிறிய அல்லது பெரிய மாநிலங்களாக இருந்தாலும் சரி, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடைமுறைகள் எவருக்கும் எதிராக பாகுபாடு காட்டாது என்பதை இந்த அவையின் புனிதமான இடத்தில் இருந்து முழு பொறுப்புணர்வுடன் நான் தெரிவிக்கிறேன்.

எதிர்காலத்தில் ஏற்படும் எந்தவொரு அதிகரிப்பும் இதே விகிதாச்சார அடிப்படையில்தான் இருக்கும். எனது நோக்கம் தெளிவாக இருப்பதால் தேவைப்பட்டால் வாக்குறுதி (promise) அளிப்பதாகவோ அல்லது உத்தரவாதம் (guarantee) அளிப்பதாகவோ எந்த ஒரு வார்த்தையையும் பயன்படுத்த தயாராக இருக்கிறேன்.

உங்களுக்கு உத்தரவாதம் என்ற சொல் தேவை என்றால் நான் உத்தரவாதம் அளிக்க தயாராக இருக்கிறேன். வாக்குறுதி தேவை என்றால் வாக்குறுதி அளிக்கத் தயாராக இருக்கிறேன். நோக்கம் தெளிவாக இருக்கும்போது சொற்களை வைத்து விளையாட வேண்டிய அவசியமில்லை.

பெண்களுக்கு இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசு கொண்டு வந்துள்ள மசோதாக்களுக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று நான் எதிர்க்கட்சிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த காலத்தில் இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள், தேர்தல்களில் மிக கடுமையாக பாதிக்கப்பட்டதை எதிர்க்கட்சிகள் நினைவில் கொள்ள வேண்டும். அனைத்துத் தரப்பினரும் ஆதரவு அளித்தால் அது எந்த ஒரு தரப்பினரின் அரசியலுக்கும் சாதகமாக அமையாமல் ஒட்டுமொத்தநாட்டுக்கே சாதகமாக அமையும்” என தெரிவித்தார்.