Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

“ஐபிஎல் தரும் உடனடி பணம், புகழுக்கு மயங்காதீர்கள்” -கோலி அட்வைஸ்

இளம் கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் மூலம் கிடைக்கும் உடனடி புகழும், பெரும் பண வருமானமும் மட்டுமே இலக்காகக் கொள்ளாமல், நீண்டகால அர்ப்பணிப்புடன் உலக கிரிக்கெட்டில் மரியாதை பெறும் நோக்கத்துடன் விளையாட வேண்டும் என்று லெஜண்ட் விராட் கோலி வலியுறுத்தியுள்ளார்.

ஆர்சிபி அணி நடத்திய புத்தாக்க லேபில் பேசிய விராட் கோலி, ஐபிஎல் பணமழை, புகழ் மழை கொடுக்கும் உடனடி மயக்கத்துக்கு ஆளாக வேண்டாம் என்று இளைஞர்களை எச்சரித்தார். ஃபிராஞ்சைஸ் கிரிக்கெட்டின் எழுச்சி இளம் வீரர்களின் மனப்போக்கையே மாற்றியுள்ளதாக கூறினார். சில அதிரடி இன்னிங்ஸ்களிலேயே புகழும் பணமும் கிடைப்பதால், நீண்டகால கிரிக்கெட் பயணத்தின் அருமையை பலர் மறந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து கோலி கூறியது: “இப்போது பலர் உந்துதல் அல்லது வேட்கை என்பதைக் கூட பணத்துடன் இணைத்துப் பார்க்கிறார்கள். ஆம், பணம் ஒரு பெரிய காரணம் தான். குறிப்பாக, 20 பந்துகளில் 40 அல்லது 50 ரன்கள் அடித்தாலே பெரும் புகழும் அங்கீகாரமும் கிடைக்கும் ஒரு வடிவம் உருவாகியுள்ளது. இன்று ஐபிஎலில் வீரர்கள் சம்பாதிக்கும் பணம் அவர்களை மிகவும் வசதியான நிலையில் வைத்துவிடுகிறது.

இந்த தலைமுறை வீரர்கள் பவர் ஹிட்டிங்கில் கில்லாடிகளாக உள்ளனர். ஆனால் சிக்கலான பிட்சில் 175 அல்லது 180 ரன்களை துரத்தும்போது, அணி இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தால் என்ன செய்வது?

அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப உங்கள் பேட்டிங்கை மாற்றத் தெரிந்திருக்க வேண்டும். ஒரே மாதிரி விளையாடுவது போதாது. ஏழு அல்லது எட்டு விதமாக பேட் செய்யும் திறன் இருக்க வேண்டும்.

பிட்ச் பவுண்டரிகளை அடிக்க அனுமதிக்கவில்லை என்றால், ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் திறன் இருக்க வேண்டும். எனக்கு கிரிக்கெட் என்பது ஆட்டத்தை உடைத்துப் புரிந்து கொள்வது. எந்தச் சூழ்நிலையில் எப்படி அணுக வேண்டும் என்பதை அறிதல்.

அதற்காக உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நான் என்னை தயார்படுத்த வேண்டும். உங்கள் திறமைகளை வெளிக்கொணர மனதளவில் நீங்கள் எடுக்கும் முடிவுகள்தான் முக்கியம்” என்று இளம் வீரர்களுக்கு விராட் கோலி அறிவுரை வழங்கியுள்ளார்.