Tuesday, 01 September 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

மும்பையில் பருவமழை தீவிரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தலைநகர் மும்பையில் இன்று (ஜூன் 22) காலை கனமழை கொட்டித் தீர்த்தது. இதன், காரணமாக நகரின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் உள்ள சாலையில் மழைநீர் தேங்கியது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் மும்பை நகரில் பருவமழை தீவிரமாக இருக்கும். நடப்பு ஆண்டில் பருவமழை சற்று தாமாதமாக அங்கு தொடங்கியது. காலநிலை மாற்றம் காரணமாக இந்தத் தாமதம் ஏற்பட்டதாக வானிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.இந்தச் சூழலில் மும்பையில் இன்று காலை கனமழை பதிவானது. இடி, மின்னலுடன் கூடிய இந்த மழையின் போது மணிக்கு 30 முதல் 40 மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இந்நிலையில், வரும் செவ்வாய்க்கிழமை வரை மஞ்சள் எச்சரிக்கை கொடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று மும்பையில் மழைப் பொழிவு மேலும் தீவிரமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று (திங்கட்கிழமை) வாரத்தின் முதல் நாள் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம் மற்றும் பணிக்கு சென்ற மக்கள் என அனைவரது இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. மழை பொழிவு மும்பை நகரில் பரவலாக பதிவானது. மழை சற்று குறைந்த பின்னர் சாலையில் தேங்கிய மழை நீர் காரணமாக போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

குறிப்பாக வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவே நெடுஞ்சாலையில் போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. அந்த சாலையில் மழை நீர் தேங்கியதோடு சரக்கு வாகனம் ஒன்றும் விபத்தில் சிக்கியது போக்குவரத்து பாதிப்பை தீவிரமாக்கியது. மழை காரணமாக நகரின் முக்கிய பகுதிகளில் சுரங்கப்பாதைகளிலும் மழை நீர் தேங்கியது. அந்தேரி, பாந்த்ரா உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

மும்பை மழை குறித்த பதிவுகள் சமூக வலைதளத்தில் வைரலாக பயனர்கள் மத்தியில் பேசப்பட்டது. அதில் மழை, காற்றின் வேகம், சாலையில் தேங்கிய மழை நீர் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. மும்பையில் வரும் நாட்களில் மழைப் பொழிவு அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.