Tuesday, 01 September 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓட்டம் - முதல்வர் விஜய் பங்கேற்பு

சென்னை: சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சென்னையில் ‘ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs’ போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, அதில் தானும் பங்கேற்றார்.

சென்னை - காமராஜர் சாலையில் இந்த ஓட்டம் தொடங்கியது. இதில் முதல்வர் விஜய் பங்கேற்றார். அவருடன் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், மரிய வில்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் அரசின் உயர் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், தடகள ஆர்வலர்கள் என பலர் பங்கேற்றனர்.

இந்த ஓட்டத்தை தொடங்கி வைப்பதற்கு முன்னதாக போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு வாசகத்தை முதல்வர் விஜய் எழுதினர். தொடர்ந்து போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியை இந்த ஓட்டத்தில் பங்கேற்றவர்கள் எடுத்துக் கொண்டனர். அதனை முதல்வர் விஜய் வாசித்தார்.“போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்துக்கு ஆளாகமாட்டேன்; மேலும், எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் போதைப்பழக்கத்துக்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன்; போதைப் பழக்கத்துக்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து, அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன்.

போதைப்பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான நடவடிக்கையின் மூலம் போதைப்பொருளை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன்; மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்” என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்த ஓட்டத்தை கொடியசைத்து முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, ஓட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவருடன் அமைச்சர்கள், அதிகாரிகள், காவல் துறையினர், விளையாட்டு வீரர்கள் என இந்த ஓட்டத்தில் அனைவரும் பங்கேற்றனர்.

முதல்வர் பதக்கம் அறிவிப்பு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாநிலத்தில் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் சிறந்து விளங்கிய காவல் அதிகாரிகளுக்கு, ‘போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு சிறப்பு பணிக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு முதல் இந்த பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், முதல்வர் விஜய், 2026-ம் ஆண்டிற்கான பதக்கங்களை 14 காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்களுக்கு வழங்க ஆணை பிறப்பித்துள்ளார்.