Tuesday, 01 September 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை

சென்னை: தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தவாறு சிறு, குறு விவசாயிகளின் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், “கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாததால் ஏற்பட்ட மன உளைச்சலில் நாகை மாவட்டம் தலைஞாயிறை அடுத்த பிரிஞ்சிமுளை கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் என்ற விவசாயி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். சோமசுந்தரத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறு, குறு விவசாயியான சோமசுந்தரம் அங்குள்ள கூட்டுறவு வங்கியில் தமது நிலத்தை அடகு வைத்து ரூ.85 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து தமது வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்த்தார். ஆனால், இரு முறை கடன் அறிவிப்பு வெளியிடப்பட்ட போதும் ரூ.75 ஆயிரம் வரையிலான கடன்கள் மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டன. விவசாயி சோமசுந்தரம் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படவில்லை. அதனால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்.

உழவர்களின் பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் கடந்த 4ம் தேதி விவசாய அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்களிலும் அவர் கலந்து கொண்டார். போராட்டத்தை முடித்துக் கொண்டு நேற்று அதிகாலை 3.30 மணிக்கு வீடு திரும்பிய அவர், அடுத்த சிறிது நேரத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முழுமையாக கடன் தள்ளுபடி செய்யப்படாததால் ஏற்பட்ட மன உளைச்சல் தான் காரணம்.

தவெக ஆட்சிக்கு வந்தால் சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்த்திருந்த உயிரிழந்த விவசாயி சோமசுந்தரம் மட்டுமின்றி லட்சக் கணக்கான விவசாயிகள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆகியிருக்கிறார்கள். காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாததால் குறுவை சாகுபடி பொய்த்தது உழவர்களின் மன உளைச்சல் மேலும் அதிகரித்திருக்கிறது. அதற்கான காரணங்களுக்கு தீர்வு கண்டு அவர்களின் மன உளைச்சலைப் போக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.

எனவே, தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தவாறு சிறு, குறு விவசாயிகளின் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மன உளைச்சலால் உயிரிழந்த விவசாயி சோமசுந்தரத்தின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.