Tuesday, 01 September 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

கர்நாடகாவில் மனைவியை கொன்ற கணவர் கைது: வீடியோவை பெற்றோருக்கு பகிர்ந்ததால் அதிர்ச்சி

பெங்களூரு: கர்நாடகாவில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட கணவர், அவரைக் கொன்றதால் கைது செய்யப்பட்டார். மேலும், மனைவியை கொலை செய்ததை வீடியோவாக எடுத்து, அதனை அவரது பெற்றோருக்கு அனுப்பியதால் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்தக் கொடூர சம்பவம் குறித்து கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சித்தார்த் கோயல், “பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள கள்குலி கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் அசோக் (29) என்பவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த பாக்யஶ்ரீக்கும் (24) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்த தம்பதிக்கு 3 வயதில் மகன் இருக்கிறான். இந்நிலையில் பிரவீன் அசோக், பாக்யஸ்ரீக்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக சந்தேகித்தார்.

இதனால் அவ்வப்போது அவருடன் சண்டையிட்டு வந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் திங்கள் கிழமை இரவு 11 மணியளவில் பிரவீன் அசோக், பாக்யஶ்ரீயை இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்தார். அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடுவதை வீடியோவாக எடுத்து அவரது பெற்றோர், உறவினர்களுக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து பாக்யஶ்ரீயின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பிரவீன் அசோக் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்திருக்கிறோம். அவரை பாகல்கோட்டை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம்.” என்றார்.