Tuesday, 01 September 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

டெல்லி செங்கோட்டை தாக்குதலுக்கு அல்-காய்தா கிளை அமைப்பே காரணம்: ஐநா பாதுகாப்பு சபை

நியூயார்க்: டெல்லி செங்கோட்டை தாக்குதலுக்கு இந்திய துணைக்கண்டத்துக்கான அல்-காய்தா (AQIS) அமைப்பே காரணம் என்று தெரியவந்துள்ளது. ஐநா பாதுகாப்பு சபை சார்பில், பயங்கரவாதத்தை ஒடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்படும் தடைகளைக் கண்காணிக்கும் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், இத்தகவல் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே சிக்னலில் நின்ற கார் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஐநா பாதுகாப்பு சபை சார்பில், பயங்கரவாதத்தை ஒடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்படும் தடைகளைக் கண்காணிக்கும் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “AQIS ஒரு பிராந்திய பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்து உருமாறி வருகிறது. இது பெரிய பிரிவாகச் செயல்படுவதற்குப் பதிலாக, சிறு சிறு குழுக்களாக அதிகாரப் பரவலாக்க முறையில் செயல்பட்டு வருகிறது.

தனக்கான தளவாடங்களையும், நிதி ஆதாரத்தையும் உருவாக்கிக் கொண்டுள்ள இந்த அமைப்புதான் செங்கோட்டை தாக்குதலுக்குக் காரணமாக இருந்துள்ளது.

வங்கதேசத்தில் தங்கள் குழுக்களை அமைப்பதற்காக AQIS முயன்று வருகிறது. AQIS மற்றும் ஐஎஸ்ஐஎல் (சிரியாவில் செயல்படும் தீவிரவாத அமைப்பு) ஆகிய ஆணைப்புகள் பல ஆண்டுகளாகவே வேதியியல் மற்றும் உயிரி ஆயுதங்களை உருவாக்குவதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனால், அவற்றை உருவாக்குவதில் உள்ள சவால்களை அந்த அமைப்புகளால் முறியடிக்க முடியவில்லை.

வெளிநாட்டில் உள்ள ஐஎஸ்ஐஎல் குழுவால் ரைசின் என்ற நச்சுப் பொருளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு மருத்துவர் உட்பட மூன்று பேரை கடந்த 2025ம் ஆண்டின் இறுதியில் இந்திய அதிகாரிகள் கைது செய்தனர்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த குண்டுவெடிப்பு குறித்த வழக்கை முதலில் டெல்லி போலீஸார் மேற்கொண்ட நிலையில், இதன் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு மத்திய உள்துறை அமைச்சகம் இதனை தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைத்தது. இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 10 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை என்ஐஏ அமைத்தது.

குண்டுவெடிப்பு குறித்து தீவிரமாக விசாரணை நடத்திய என்ஐஏ சிறப்பு விசாரணைக் குழு, இது ஒரு தீவிரவாத தற்கொலை தாக்குதல் என அறிவித்தது. மேலும், இந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய கார் உரிமையாளர் அமிர் ரஷித் ஆல்வி உள்பட பலரை என்ஐஏ கைது செய்துள்ளது.