Tuesday, 01 September 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

PM Kisan: விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கும் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

புதுடெல்லி: விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கும் பிரதமரின் கிசான் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, இதற்காக ரூ.3.15 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரதமரின் விவசாயிகள் கவுரவ நிதி திட்டத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு (2026-27 முதல் 2030-31 வரை) தொடர, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இத்திட்டத்திற்கு மொத்தம் ரூ.3.15 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வளமே நாட்டின் வளத்துக்கு அடிப்படை என்ற அரசின் உறுதியான அர்ப்பணிப்பை இந்த நடவடிக்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு நேரடிப் பணப் பரிமாற்ற முறையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளிப்படைத் தன்மையுடன் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2019 பிப்ரவரியில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், நிலம் உள்ள தகுதியான விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டிற்கு ரூ.6,000 மூன்று தவணைகளில் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. ஆதார் சரிபார்ப்பு, டிஜிட்டல் நடைமுறை மூலம் வெளிப்படைத்தன்மைக்கு இந்தத் திட்டம் மிகச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

இதுவரை 23 தவணைகள் மூலம் ரூ.4.47 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை விவசாயிகளின் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது. 23-வது தவணையில் மட்டும் ரூ.18,984 கோடிக்கும் அதிகமான தொகை விடுவிக்கப்பட்டு 9.49 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்ததுள்ளனர்.

கொவிட் பெருந்தொற்று காலத்தில் விவசாயிகளுக்கு ரூ.1.71 லட்சம் கோடிக்கும் அதிகமாக நிதி உதவி வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் பெண் விவசாயிகளுக்கு ரூ.1.06 லட்சம் கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளதுடன், பயனாளிகளில் நான்கு பேரில் ஒருவர் பெண் விவசாயியாக உள்ளார்.நிதி ஆயோக்கின் மதிப்பீட்டின்படி, 92 சதவீதத்துக்கும் அதிகமான பயனாளிகள் இந்தத் தொகையைக் வேளாண் பணிகளுக்குப் பயன்படுத்தியுள்ளனர். சுமார் 85 சதவீத பயனாளிகள் தங்களின் விவசாய வருமானம் அதிகரித்துள்ளதாகவும் கடன் சுமை குறைந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

2020-21 முதல் 2025-26 வரையிலான காலத்தில் சாகுபடி பரப்பு 9.65 சதவீதமும், வேளாண் உற்பத்தித் திறன் 10.53 சதவீதமும், மொத்த உணவு தானிய உற்பத்தி 21.18 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் சிறந்த உதாரணமாகத் திகழும் பிரதமரின் கிசான் திட்டம், விவசாயிகளின் முதலீட்டுத் திறனை அதிகரித்து, தற்சார்பு இந்தியா, வளர்ச்சியடைந்த இந்தியா இலக்கை அடைவதில் முக்கியத் தூணாகச் செயல்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.