Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவில் நாளை தேரோட்டம்!


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை (மார்ச் 2) திங்கள்கிழமை நடைபெறுகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8-ஆம் நாளான சனிக்கிழமை காலை, சுவாமி சண்முகர் வெள்ளைச் சாத்தி பெரிய வெள்ளிச் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து மேலக்கோயில் சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து, முற்பகலில் பச்சை சாத்தி, பச்சைக் கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்த சுவாமி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீண்டும் கோயிலைச் சேர்ந்தார்.

தொடர்ந்து, சுவாமி குமரவிடங்கப் பெருமானும், சுவாமி அலைவாயுகந்த பெருமானும் தனித்தனி வெள்ளிக் குதிரை வாகனங்களில் எழுந்தருளி, பாளையங்கோட்டை சாலையில் உள்ள வேட்டை வெளி மண்டபத்தில் திருக்கண் சாத்தி, வீதியுலா வந்து மேலக்கோயில் சேர்கின்றனர். அதன்பின்னர், சுவாமி குமரவிடங்கப் பெருமானும், தெய்வானை அம்மனும் பகலில் தனித்தனி பல்லக்கிலும், இரவில் சுவாமி தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் வீதியுலா வருகின்றனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (மார்ச் 2) காலை 7 மணிக்குத் தொடங்குகிறது. இதையொட்டி, திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக டி.எஸ்.பி. (DSP) மகேஷ்குமார் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் கனகராஜன், மதுரைவீரன் உள்ளிட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.