Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

கோவை: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அதிரடித் தீர்ப்பு

கோவை: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருமே குற்றவாளிகள் என்று கூறிய கோவை மகளிர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

பீளமேடு விமான நிலையம் பின்புறம், பிருந்தாவன் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ந் தேதி இரவு ஆண் நண்பருடன் 21 வயதான கல்லூரி மாணவி பேசிக் கொண்டு இருந்தார்.

அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஆண் நண்பரை தாக்கி விட்டு, மாணவியை தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. கல்லூரி மாணவிகள் மத்தியில் கடும் அச்சம் எழுந்தது.

காமுகர்கள் கைது

இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான சதீஷ் என்ற கருப்பசாமி (வயது 30), கார்த்திக் என்ற காளீஸ்வரன் (21), மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த குணா என்ற தவசி (20) ஆகியோரை துடியலூர் அருகே கீரணத்தம் பகுதியில் பதுங்கியிருந்தபோது போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

கோவை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தரராஜன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக 270 பக்கங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சாட்சிகள் விசாரணை கடந்த மாதம் 2-ந் தேதி தொடங்கியது. கல்லூரி மாணவி, மாணவியின் ஆண் நண்பர், மாணவியின் தாய், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் சாட்சியம் அளித்தனர். 21 நாட்களில் சாட்சிகள் விசாரணை முடிவு அடைந்தது.

இந்த வழக்கு இன்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் இறுதிகட்ட விசாரணைக்கு வந்தது. அதில் கைது செய்யப்பட்ட 3 பேருமே குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

மேலும், இவ்வழக்கில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த A-1 குற்றவாளி கருப்பசாமி, அவரது சகோதரர் A-2 குற்றவாளி காளீஸ்வரன் மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த A-3 குற்றவாளி தவசி ஆகிய மூன்று பேருக்கு மகளிர் நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜன் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இந்த அதிரடித் தீர்ப்பு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Tags: கோவை