Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

சகல நன்மைகளும் வந்துசேரும் களக்காடு சத்திய வாகீஸ்வரர் கோயில்!

சத்தியவாகீஸ்வரர் கோயிலானது, திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் அமைந்துள்ளது. நாங்குநேரியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு நெல்லை பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை நிலைநாட்ட அவதரித்த மகா விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமர், சீதையைத் தேடி அலைந்த போது களக்காடு பகுதியில் லிங்கத்தை வழி பட்டதாகவும் கூறப்படுகிறது.

கிபி 11ஆம் நூற்றாண்டில், களக்காட்டை தலை நகரமாகக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்த வீரமார்த்தாண்ட மன்னன், புன்னை மரத்தடியில் கீழிருந்து லிங்கத்தை கொண்டு இந்த கோயிலை கம்பீரத்துடன் கட்டி வழிபட்டதாகவும் வரலாற்றில் குறிப்பிடப் பட்டுள்ளது.

9 அடுக்குகளுடன் 156 அடி உயரம் கொண்ட இந்த கோயிலின் ராஜ கோபுரத்தின் நிழல் நிலத்தில் விழாதவாறு கட்டப்பட்டுள்ளது. கோபுரத்தில் உட்பகுதியில் புராண இதிகாச கதைகளை விளக்கும் படங்கள் இறைவனின் திருவிளையாடல் ஓவியங்கள் என எல்லாம் எக்காலத்திற்கும் அழியாத மூலிகை கலர் பூச்சுகளைக் கொண்டு வரையப்பட்டுள்ளது என்பது கோயிலின் தனிச்சிறப்பு.

மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களின் முறையே 20, 21, 22 ஆகிய தினங்களில் அதிகாலைப் பொழுதில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வும் இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சத்தியவாகீஸ்வரர் கோயிலானது, இந்த பகுதி பக்தர்களால் பெரிய கோயில் என்று செல்லமாக அழைக்கப் பட்டும் வருகிறது.

இந்த கோயிலின் உட்பகுதியில் ஸ்ரீ சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்மன் சன்னதிகள் தவிர, விநாயகர், ஸ்ரீ நவநீத கிருஷ்ணர், ஐயப்பன், துர்க்கை அம்மன் மற்றும் 63 நாயன் மார்களுக்கும் தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கோயிலில் வழிபடுபவர்களுக்கு சகல நன்மைகளும் கிடைத்திடும் என்பதால் பக்தர்கள் கூட்டம் எப்போதும் அதிகரித்தே காணப்படுகிறது.