Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

“பாரதிராஜா குழந்தை போல மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடுவார்” - ரஜினி

சென்னை: “பாரதிராஜாவின் திறமை மற்றும் சாதனையைப் பற்றி அனைவருக்கும் தெரியும். தனிப்பட்ட முறையில் அவர் ஒரு குழந்தை மாதிரி. மனதுக்குள் தோன்றியதே வெளிப்படையாக சொல்லிவிடுவார்” என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கடும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜா, இன்று (ஜூன் 10) அதிகாலையில் காலமானார். இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த், பாரதிராஜாவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர்,அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பாரதிராஜாவின் திறமை மற்றும் சாதனையைப் பற்றி அனைவருக்கும் தெரியும். திரைத்துறைக்கு அதிகப்படியான நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்தி, அவர்களையும், திரையுலகையும் வாழ வைத்தவர். அதுமட்டுமல்லாமல் சினிமா துறையில் யாருக்கு எந்த பிரச்சினை வந்தாலும் முதலாவதாக குரல் கொடுத்து போராடியவர். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவரது படைப்புகள் மறக்கப்பட மாட்டாது.

அவருடைய பெயர் என்றென்றும் தமிழ் மக்களின் இதயத்தில் இருக்கும். தனிப்பட்ட முறையில் அவர் ஒரு குழந்தை மாதிரி. மனதுக்குள் தோன்றியதே வெளிப்படையாக சொல்லிவிடுவார். பிடித்தால் பிடித்திருக்கிறது; இல்லையென்றால் பிடிக்கவில்லை என கூறிவிடுவார். என்னைப் பற்றியும் அவர் நிறைய விமர்சனங்களை வைத்திருக்கிறார்.

உன்னை எனக்கு பிடிக்கும்; உனது நடிப்பு எனக்கு பிடிக்காது என்பார். அவருடன் இருந்தாலே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அவரைப்போல வெளிப்படையாக பேசக் கூடியவர்கள் யாரும் கிடையாது. அதனால்தான் எம்ஜிஆர், கருணாநிதி மற்றும் நடிகர் சிவாஜி ஆகியோருடன் நல்ல நட்பில் இருந்தவர்.

உயிருடன் இருக்கும் போதே அவரைப் பார்க்க வேண்டும் என நினைத்தேன்; அவர் குணமாகி விடுவார் அப்புறம் பார்க்கலாம் என கூறினார்கள். அவர் உயிருடன் இருக்கும்போது அவரை பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டு விட்டது. அவர் என்றென்றும் எனது நினைவில் என்னுடன் இருப்பார். அவருடைய ஆத்மா சாந்தமடையட்டும். அவருடைய குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.