Saturday, 18 July 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

கோவை, நீலகிரி, தேனியில் ஜூலை 3-ல் கனமழை வாய்ப்பு

கோவை: தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜூலை 3-ம் தேதி இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு விஞ்ஞானியும், உயரதிகாரியுமான வி.ஆர்.துரை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டம் தாலுகா அலுவலகம், சின்னக்கல்லாரில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மகாராஷ்டிராவிலிருந்து வடக்கு கேரளா வரை கடல் மட்டத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதுதவிர, வடக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதையொட்டிய தெற்கு வங்கதேச பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஜூலை 3-ம் தேதி உருவாகக்கூடும்.

மழையைப் பொறுத்தவரை, வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஜூன் 30-ம் தேதி முதல் ஜூலை 2-ம் தேதி வரை மிதமான மழை மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 3-ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

ஜூலை 4-ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

ஜூலை 5-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செவ்வாய், புதன் (ஜூன் 30, ஜூலை 1) ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் ஜூலை 2-ம் தேதி வரையும், தென் தமிழக கடலோரப்பகுதிகளில் ஜூலை 3,4 ஆகிய தேதிகளிலும்,

தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஜூலை 2-ம் தேதி வரையும், மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஜூலை 3, 4 ஆகிய தேதிகளிலும், கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதையொட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஜூலை 4-ம் தேதி வரையும் பலத்த சூறாவளி காற்று வீசும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மேற்படி தேதிகளில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.