Saturday, 18 July 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

பழநி கோயில் நில மோசடி: திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் அறநிலையத் துறை, பத்திரப் பதிவு அதிகாரிகள் ஆஜர்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்.பி.சாஜிதா அறநிலையத்துறை, பத்திரப் பதிவுத்துறை, வருவாய்த் துறை அதிகாரிகளிடம் இன்று விசாரணையை தொடங்கினார்.

​திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம், ரூ.2 கோடிக்கு மோசடியாக பதிவு செய்யப்பட்டது. இது குறித்து பழநி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் ச.முருகானந்தம் பழநி அடிவாரம் போலீஸில் புகார் அளித்தார்.இதன் அடிப்படையில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், டிரஸ்ட் நிர்வாகி முருகதாஸ் உள்ளிட்ட 4 பேர் மீது கூட்டுச் சதி, மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நில மோசடியில் பல முக்கியப் பிரமுகர்களுக்கும், உயர்மட்ட அரசியல் நிர்பந்தங்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்பதால், விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து சிபிசிஐடி போலீஸார், பழநி அடிவாரம் போலீஸில் இருந்து ஆவணங்களை பெற்று விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் நேற்று திண்டுக்கல், தேனி, திருச்சி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 5 சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்களின் மேற் பார்வையில் 20-க்கும் மேற்பட்ட போலீஸார், திண்டுக்கல் அலுவலகத்தில் முதற்கட்ட தகவல் அறிக்கை தயார் செய்தனர். இதையடுத்து பழநியில் சம்பந்தப்பட்ட இடங்களில் போலீஸார்கள ஆய்வு நடத்தினர்.இதனை தொடர்ந்து இன்று காலை திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகம் வந்த சிபிசிஐடி எஸ்.பி.சாஜிதா பழநி கோயில் நில மோசடி குறித்து புகார் அளித்த அறநிலையத் துறை கண்காணிப்பாளர் முருகானந்தத்திடம் திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணையை துவக்கினார்.

தொடர்ந்து பத்திர பதிவுத்துறை, வருவாய்த் துறை அலுவலர்களிடம் விசாரணையை தொடர்ந்தார். விசாரணை முடிவில் மோசடியில் தொடர்புடைய மேலும் பல முக்கியப் புள்ளிகள் குறித்த விவரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Advertisement